முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்தவர் கபில்தேவ். இவர் தலைமையிலான இந்திய அணி கடந்த 1983ம் ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த நிலையில் இந்திய அணியில் ஓய்வு பெற்ற பிறகு கபில்தேவ், பிசிசிஐயை எதிர்த்து செயல்பட ஆரம்பித்தார்.
பிசிசிஐயை எதிர்த்து கபில்தேவ், கிரண் மோர் மற்றும் சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள் சேர்ந்து இந்தியன் கிரிக்கெட் லீக்(ஐசிஎல்) என்ற புதிய அமைப்பை துவங்கினார். அதன் தலைவராக கபில் தேவ் பதவி வகித்தார். இதனால் பிசிசிஐயின் வெறுப்பிற்கு ஆளான கபில்தேவ், பிசிசிஐ அளிக்கும் சலுகைகளில் இருந்து நீக்கப்பட்டார்.

இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் கபில்தேவ் இடையே கடும் வார்த்தை போர் நடைபெற்றது. இந்த நிலையில் கபில்தேவ்வை சந்தித்த பிசிசிஐ தலைவர் சீனிவாசன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிசிசிஐ உடன் சேர்ந்து செயலாற்றுவதன் மூலம் கிடைக்கும் சலுகைகள் குறித்து சீனிவாசன் விளக்கி கூறினார்.
இதையடுத்து பிசிசிஐயிடம் மன்னிப்பு கடிதம் அளிக்க, கபில்தேவ் ஒப்புக் கொண்டார். முன்னதாக ஐசிஎல் அமைப்பில் இருந்து விலகிய கிரண் மோர், பிசிசிஐயிடம் மன்னிப்பு கடிதம் அளித்து பிசிசிஐயில் இணைந்தார். அதேபோல கபில்தேவ் தனது மன்னிப்பு கடிதத்தை பிசிசிஐயிடம் அளித்தார்.
இந்த கடிதத்தை ஏற்றுக் கொண்ட பிசிசிஐ தற்போது கபில்தேவ்வை இணைத்து கொள்ள முடிவு செய்துள்ளது.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் அளித்த மன்னிப்பு கடிதத்தை பிசிசிஐ ஏற்று கொண்டது. இதில் அவர் பிசிசிஐக்கு எதிரான செயல்பட்ட ஐசிஎல் அமைப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வருங்காலத்தில் பிசிசிஐயின் வளர்ச்சிக்கு உதவியாக செயல்பட போவதாக அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.