Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 ஏப்ரல் 2009

இதுவரை பார்க்காத ரஜினி…! - எந்திரன் பற்றி மனம் திறக்கும் ஷங்கர்!

ருப்பது கோடம்பாக்கமாக இருந்தாலும், ஹாலிவுட் தரத்தில் சிந்தித்து அசத்தல் பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் கில்லாடி எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் ஷங்கர்.

இவர் காண்பதெல்லாம் காஸ்ட்லி கனவுகள்… உயர்ந்த எண்ணங்கள், அதைவிட உயர்வான பட்ஜெட், எப்போதும் ரசிகனை மகிழ்வித்துக் கொண்டே இருக்கும் நேர்த்தியான, ரசனை மிகுந்த பொழுதுபோக்கு, அர்த்தமுள்ள நகைச்சுவை என தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ரசனையை அறிமுகப்படுத்திய பெருமை ஷங்கருக்கு உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவாஜி என்ற பிரம்மாண்டத்தைத் தந்த ஷங்கர், மீண்டும் அதே ‘ஸ்டைல் சாம்ராட்டு’டன் இணைந்து எந்திரன் - தி ரோபோ படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் தொழில்நுட்பம், இந்தியாவின் படைப்புத் திறனை உலகுக்குப் பறைசாற்றும் முனைப்புடனும் ஷங்கர் உருவாக்கும் இந்த ரோபோ பற்றித்தான் இன்று சினிமா உலகம் முழுக்கப் பேச்சு.

சிவாஜி திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பரபரப்பாக செய்திகளில் உலாவர ஆரம்பித்தது. ஆனால் ரோபோ என்ற பெயர் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே மீடியா முழுக்க அது பற்றிய செய்திகளே ஆக்கிரமித்து நிற்கின்றன.

தனது படங்களைப் பற்றிய ரகசியங்களைக் காப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆரம்பித்து, எதிர்பாராத நேரத்தில் முடித்துவிட்டுத் திரும்புவது அவரது வழக்கம்.

ஹைதராபாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது என யாராவது அரைவேக்காட்டுத்தனமாக பிட் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ஷங்கர் ஹாய்யாக தனது சென்னை வீட்டில் நீச்சல் குளத்தில் மேயும் மீன்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அதுதான் ஷங்கர்.

எந்திரன் குறித்து அவர் இதுவரை யாருடமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் முதல்முறையாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அவரது சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதன் சில பகுதிகளை மட்டும் இங்கே தமிழில் தருகிறோம்.

சூப்பர் ஸ்டாரைப் போலவே யாரும் எதிர்பாராததைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மிக்கவும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ரஜினி வெளிப்படையாகச் சொல்வாரா!

எந்திரன் - என்ன நிலை இப்போது?

இதுவரை மூன்று பாடல் காட்சிகளைப் படமாக்கி முடித்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு பெருவில். மற்றொன்று பிரபுதேவா நடன அமைப்பில், ஹைதராபாத் பிலிம் சிட்டியில். முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ரோபோ சம்பந்தமான காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாம்.

படம், அதை தான் உருவாக்கும் விதம் குறித்து இப்படிக் கூறுகிறார் ஷங்கர்:

“என் படங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து உருவாக்குகிறோம். சரியான முன் தயாரிப்பு இல்லாமல் ஒரு சின்ன காட்சியைக் கூட நாங்கள் எடுப்பதில்லை. எந்த சமரசமும் இல்லாமல், மிகுந்த கவனத்தோடுதான் நான் எல்லா படங்களையும் உருவாக்குகிறேன். ஆனால் எந்திரனுக்கு அதையெல்லாம் விட 10 மடங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

சரியான முறையில், உரிய தரத்தில் கொடுத்தால் தமிழில் ஃபேண்டஸி கதைகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்.

எந்திரனில் அனிமேட்ரானிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளை எடுத்து வருகிறோம். தமிழ் சினிமாவுக்கு இது மிகவும் புதுசு. எலக்ட்ரானிக்ஸ், ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, பொம்மைகளையும் உயிருள்ள மனிதர்களைப் போலவே நடமாட வைக்கும் இந்த முயற்சிக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பாடல்களை அழகழகாக, விதம் விதமாகப் படமாக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக எல்லாப் பாடல்களுக்கும் வெளிநாட்டுக்குப் போகும் ஆளல்ல நான். என் மற்ற படங்களில்கூட ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே வெளிநாடு. மற்றபடி எல்லாமே உள்நாடுதான்.

முதல்வனில் மிகப்பெரிய ஹிட் ‘உப்புக் கருவாடு…’ அதை இங்கேதான் எடுத்தேன். சிவாஜியில் கலக்கிய ‘அதிரடிக்காரன்…’ உள்ளூரில், அதுவும் தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்ட பாடல்தான்.

எந்திரனில் மிக அற்புதமான, விஞ்ஞான அடிப்படியிலான செட்களை உருவாக்கியுள்ளோம். முழுக்க முழுக்க எதிர்காலத்தில் உலகில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்பதைக் கணித்து உருவாக்கப்பட்ட செட்கள் அவை. மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இந்தப் படத்தில் மிகப் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு பாடல் அட்டகாசமாக எழுதப்பட்டு, அருமையாக மெட்டமைக்கப்பட்டுள்ளன…”

சரி… சூப்பர் ஸ்டார் பற்றி கூறுங்கள்…

சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சியான ஒரு அனுபவம். அவருடன் பணியாற்றத் துவங்கிய பிறகுதான் அவர் எத்தனை பவர்ஃபுல் மனிதர், எத்தனை எளிமையானவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் மிகப்பெரிய உயரத்திலிருக்கிறார். மிகச் சிறந்த மனிதர்களுடன் தொடர்பில் உள்ளார், ஆனாலும் அவர் காட்டும் பணிவு யாரையும் வியக்கச் செய்யும். அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பணிவு வரும் என்பதே உண்மை.

இந்தப்படத்துக்கு ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி என்று முன்பே முடிவு செய்துவிட்டோம். கதைக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட அற்புதமான டிகை அவர்.

எந்திரனில் தனி காமெடி ட்ராக் கிடையாது. கதையிலேயே தேவையான நகைச்சுவை உள்ளது. கருணாஸும் சந்தானமும்தான் காமெடி பகுதியை செய்கிறார்கள். இயல்பான நடிகர்கள்.

இந்தப் படத்தின் மொத்த சிறப்பு பற்றி?

சிவாஜியில் ஸ்டைல் ஸாங் பாத்திருப்பீங்க. இந்தப் படத்தில் அதை விட பலமடங்கு புதுமையான பாடல் இருக்கு. ரஜினி சார் பிரமிக்க வச்சிருக்கார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவே, ‘நான் இதுவரை இப்படி ஒரு கடினமான மூவ்மெண்டை அமைத்ததில்லை’ என்று என்னிடம் சொல்லும் அளவுக்கு பிரமாதமான, வித்தியாசமான ரஜினியையும், அவரது ஸ்டைல் நடனத்தையும் பார்க்கப் போகிறீர்கள்! என்கிறார் ஷங்கர்.

வாவ்… பல்ஸை எகிற வைக்கிறீங்க ஷங்கர் சார்!

-வினோ

என்வழி ஸ்பெஷல்

ஷங்கர் பேட்டி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com