Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

15 ஆகஸ்ட் 2011

இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் ?:ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ., முடிவு

லண்டன்: டெஸ்ட் அரங்கில் இந்திய அணியின் வீழ்ச்சி பற்றி கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து 3 டெஸ்டில் தோல்வி அடைந்து, "நம்பர்-1' இடத்தை இழந்ததற்கு மோசமான பேட்டிங்கே காரணம் என தேர்வுக் குழு தலைவர் ஸ்ரீகாந்த் அடித்துச் சொல்கிறார். தேசத்தை மறந்து பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்ததே தோல்விக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது. தவறான வீரர்கள் தேர்வு மற்றும் அளவுக்கு அதிகமான கிரிக்கெட் போட்டிகளே வீழ்ச்சிக்கு காரணம் என, இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,)மீதும் பழி சுமத்துகின்றனர். இது பற்றி விரிவாக ஆய்வு செய்ய பி.சி.சி.ஐ., முடிவு செய்துள்ளது. உலக கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணி, தற்போது சரிவை சந்திக்க துவங்கியுள்ளது. இங்கிலாந்துடனான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது. இதையடுத்து டெஸ்ட் "ரேங்கிங்' பட்டியலில் "நம்பர்-1' இடத்தை பறிகொடுத்தது. முதலிடத்துக்கு இங்கிலாந்து முன்னேறியது.

ஓய்வில்லாத போட்டி: இந்த வீழ்ச்சிக்கு ஓய்வில்லாத போட்டிகளே காரணம் என குற்றம்சாட்டப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில், ஆஸ்திரேலியாவோடு ஒப்பிடுகையில் இந்திய அணி இரண்டு மடங்கு போட்டிகளில் பங்கேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் கணக்கிட்டால், இந்திய அணி 14 டெஸ்டில் விளையாடியுள்ளது. ஆஸ்திரேலியாவோ 7 டெஸ்டில் தான் பங்கேற்றுள்ளது. இதே போல இந்தியா 29 ஒரு நாள் போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 23 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளன. இப்படி தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றதால் பெரும்பாலான இந்திய வீரர்கள் சோர்வடைந்தனர். இதனால் தான் இங்கிலாந்து மண்ணில் சோபிக்க முடியவில்லை என கூறப்படுகிறது

. இதை மறுத்த தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் கூறியது: இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பேட்டிங் தான் முக்கிய காரணம். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உட்பட அனைத்து அணிகளும் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு தான் இருக்கின்றன. டெஸ்ட், ஒரு நாள் போட்டி, "டுவென்டி-20' என ஏதாவது ஒரு வகையிலான போட்டிகளில் பங்கேற்கின்றன. எனவே, இந்தியா மட்டும் அதிக போட்டிகளில் விளையாடவில்லை. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியதால், டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதனை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவை பொறுத்தவரை பேட்டிங் "கிளிக்' ஆகவில்லை. "டாப்-5' பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம் அளித்தனர். "பவுலிங்', "பீல்டிங்கிலும்' நம்மவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு செயல்பட தவறினர். தங்களுக்கு சாதகமான ஆடுகளங்களில் இங்கிலாந்து "வேகங்கள்' அசத்தினர். ஜாகிர் கான் காயம் பற்றி அதிகம் விவாதிக்க தேவையில்லை. தோல்விக்கு வீரர்கள் அல்லது பி.சி.சி.ஐ., அல்லது நிர்வாகிகள் மீது பழி சுமத்தும் பணியில் ஈடுபட வேண்டாம். தற்போது இந்திய அணி மோசமான காலக்கட்டத்தை நோக்கி செல்கிறது. நமது வீழ்ச்சிக்கான காரணங்களை கண்டறிந்து விரைவில் முதலிடத்தை மீண்டும் பிடிப்போம். தற்போது இந்திய வீரர்கள் தன்னம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர். ரசிகர்கள் தான் அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீகாந்த் கூறினார்.

ஐ.பி.எல்., பாதிப்பு: அடுத்து, பணம் கொழிக்கும் ஐ.பி.எல்., "டுவென்டி-20' போட்டிகளுக்கு முன்னுரிமை கொடுத்தால், நம்மவர்கள் டெஸ்ட் போட்டிக்கான அணுகுமுறையை மறந்து விட்டனர். டிராவிட்டை தவிர மற்றவர்கள் "டுவென்டி-20' போன்று அதிரடியாக "ஷாட்' அடித்து அவுட்டாகினர். தவிர, அதிமான ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்றதால் சோர்ந்து விட்டனர். ஜாகிர், காம்பிர், சேவக் போன்றவர்களுக்கு காயமும் ஏற்பட்டது.

பி.சி.சி.ஐ., நடவடிக்கை: டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து, வீரர்களை பி.சி.சி.ஐ., தேர்வு செய்யாததே தோல்விக்கு காரணம் என கூறப்படுகிறது. இது குறித்து பி.சி.சி.ஐ., செயலவர் சீனிவாசன் கூறுகையில்,""ஜாகிர், சேவக், காம்பிர் ஆகியோருக்கு காயம் ஏற்பட, ஒரு போட்டியில் கூட இந்தியா முழு பலத்துடன் பங்கேற்க இயலவில்லை. சுமார் 2 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்த போது யாரும் விமர்சிக்கவில்லை. ஒரு தொடரில் தோற்றவுடன் அனைத்து தரப்பிலும் இருந்து புகார் கூறப்படுகிறது. தேசத்துக்காக விளையாடுவதை தான் வீரர்கள் விரும்புகின்றனர். இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடாத வீரர்களுக்கு ஐ.பி.எல்., தொடரில் மவுசு இருக்காது. இங்கிலாந்து தொடர் முடிந்தவுடன் நமது வீரர்களின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யப்படும். பின் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.

முன்னாள் வீரர்கள் பாய்ச்சல் தோனி தலைமையிலான அணியின் மோசமான ஆட்டத்தை, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடியுள்ளனர். அணிக்கு இளம் ரத்தம் பாய்ச்சப்பட வேண்டுமென வலியுறுத்தினர். "சீனியர்' வீரர்களுக்கு விடைகொடுத்து விட்டு விராத் கோஹ்லி, ரோகித் சர்மா போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

கங்குலி: டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைவது சகஜம். ஆனால், வரிசையாக மூன்று போட்டிகளில் தோல்வி, மிகப் பெரும் ஸ்கோரை எட்ட முடியாதது வருத்தம் அளிக்கிறது. இது, இத்தொடருடன் முடிந்து விடுமா அல்லது வீழ்ச்சியின் துவக்கமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

கும்ளே: அனுபவ வீரர்களான சச்சின், டிராவிட், லட்சுமண் ஆகியோரது ஓய்வுக்கு பின் டெஸ்ட் அரங்கில் இந்தியாவின் நிலைமை இன்னும் மோசமடையும். எதிர்காலத்தை கணக்கில் கொண்டு, தற்போதே நான்கு அல்லது ஐந்து இளம் வீரர்களை கண்டறிய வேண்டும். விராத் கோஹ்லி, ரோகித் சர்மா போன்றவர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்.

அருண் லால்: இங்கிலாந்து மண்ணில் சந்தித்த தோல்வி, இந்திய அணிக்கு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. 35 அல்லது 38 வயதான வீரர்களுடன் இனியும் விளையாடுவதில் அர்த்தமில்லை. இவர்களுக்கு கண் பார்வை குறைவு, உடல் சோர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்களுக்கு பதில் இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

வினோத் காம்ப்ளி: இங்கிலாந்தின் ஸ்டிராசுடன் ஒப்பிடுகையில் கேப்டனாக தோனியின் வியூகம் எடுபடவில்லை. தவறான திட்டங்களை வகுத்தார். சச்சின் கிரிக்கெட் வாழ்க்கையில், இத்தொடர் தான் மிக மோசமானதாக அமைந்தது.

வெங்கசர்க்கார்: முன்னணி பவுலர்களுக்கு காயம், எளிய "கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டது போன்றவை சிக்கலை ஏற்படுத்தியது. லார்ட்ஸ் டெஸ்டில் கேப்டன் தோனியே "பவுலிங்' செய்ய வேண்டிய பரிதாப நிலைமையை காண முடிந்தது. வீரர்கள் மத்தியில் வெற்றி தாகம், போராடும் குணம் இல்லாததே தோல்விக்கு காரணம்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com